Saturday, October 29, 2011

தொடரும் நீதிக்கொலைகள்: II

பாகம் 2: சாந்தன், முருகன், பேரறிவாளன்

1) 1991 மே 21ம் நாள் சென்னை திரும்பெரும்புதூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு வெடித்து கொலை செய்யப்பட்டார்.

அப்போது நடந்து கொண்டிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்காகப் பிரச்சாரம் செய்ய ராஜீவ் காந்தி திருபெரும்புதூர் வந்திருந்தார்.

மேடைக்குப் போகும் வழியில் ராஜீவ் காந்திக்கு மாலை போட்ட தானு என்ற பெண் தனது இடுப்பில் கட்டப்பட்ட RDX வெடிகுண்டை வெடிக்கச்செய்து தானும் இறந்தாள்.

ராஜீவ் காந்தியை வேடிக்கை பார்க்க வந்தவர்கள், காவலர்கள், கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 14 பேர் இறந்து போனார்கள்.

ராஜீவ் மக்களோடு மிகவும் நெருக்கமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்றும் தனக்கு ஆபத்து என்றாலும் தான் வேறு என்ன செய்ய முடியும் என்று சொன்னார் என்றும் ராஜீவ் காந்தியுடன், காரில் பிரச்சாரத்தின் போது, திருபெரும்புதூருக்குப் பயணித்த, பார்பரா க்ரோசே எனும் அமெரிக்க நீயூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் கூறுகிறார்.

பின்னாட்களில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு பற்றி, விசாரணை செய்த நீதிபதி வர்மா, உள்ளூர் காங்கிரஸ் காரர்கள் தான் ராஜீவ் காந்திக்கு, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குலைத்தனர், என்று குற்றம் சாட்டினார்.

அப்போது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழக கவர்னர் பீஸ்ம நாராயணன் சிங், ராஜீவ் காந்தியை பிரச்சாரத்திற்கு வரவேண்டாம், அவர் உயிருக்கு ஆபத்து என்று அறிவுறுத்தியாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதன் பேரிலேயே, ராஜீவ் தமிழ்நாட்டிற்குப் பிரச்சாரம் செய்ய வந்ததாகவும், மூத்த பத்திரிக்கையாளர் ராம் பகதூர் ராய் கூறுகிறார்.

மேலும் ராஜீவ் கொலை பற்றி விசாரித்த ஜெயின் கமிசன் அரசியல் தரகர் சந்திரசாமிக்கும், அமெரிக்க உளவுத் துறைக்கும் மற்றும் 21 பேருக்கும் இந்தக் கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறது.

அந்நாளைய இந்திய பிரதமர் சந்திர சேகர் ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான CBIயிடம் ஒப்படைத்தார். CBI கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு SIT (SPECIAL INVESTIGATIVE TEAM) ஒன்றை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்று நரசிம்ம ராவ் பிரதமரானார். மரகதம் சந்திரசேகரும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருபெரும்புதூரில் ராஜீவ் காந்திக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் பின்னாட்களில் உருவாக்கப்பட்டன. தொழிற்வளர்ச்சிக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.

வைணவக் குருக்களில் ஒருவரான ராமானுஜர் பிறந்த இடமான திருபெரும்புதூரில் 2000க்குப்பிறகு தமிழ்நாட்டில் வேறு எந்த சிறுநகரத்திலும் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு குவிகிறது. ஒரு புதிய விமான நிலையம் உருவாக்கப்படவுள்ளது.

ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நினைவூட்டு வதற்கும் தமிழர் மனதில் குற்ற உணர்வை தொடர்ந்து நீடித்திருக்கச் செய்வதற்கும் திருபெரும்புதூர் மிக அவசியமானதால் அந்நகரம் தொடர்ந்து சிறப்பான கவனத்திற்கு உள்ளாகிறது.


2) SITயின் விசாரணை

முன்னாள் CBIயின் தலைவரான கார்த்திகேயன் தலைமையில் SIT என்கிற சிறப்பு புலனாய்வுக்குழு சென்னையில் மல்லிகை என்ற அரசு கட்டடத்தில் தனது புலனாய்வைத் தொடங்கியது.

சிறப்பு புலனாய்வுக்குழுவில் அதன் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி, 4 DIGக்கள், 8 SPக்கள், 14 DSPக்கள், 44 இன்ஸ்பெக்டர்கள் உட்பட்ட 71 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.

விடுதலைப் புலிகள் தான் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர் என்கிற முன் முடிவு எடுக்கப்பட்ட வாதத்தில் இருந்து தான் புலனாய்வு தொடங்கியது.

ராஜீவ் கொலைக்கு முன்பு புலிகளுக்கும் மற்ற ஈழத்தமிழ் விடுதலைக்குழுக்களுக்கும் இந்திரா காந்தியும் எம்.ஜி.ராமச்சந்திரனும் ராணுவ உதவியும் நிதி உதவியும் செய்தனர். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல இடங்களில் அரசின் ஆதரவோடு ஆயுதப்பயிற்சியும் கொடுக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது விமானத்தில் ஈழப்பகுதிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் அனுப்பினார். பிரபாகரின் புகைப்படம் பலர் வீடுகளில் பெருமையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சூழலில் தான் ராஜீவின் கொலை நடந்தது.

பெருவாரியாக ஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் மூலை முடுக்கிலெல்லாம் வெளிப்படையான ஆதரவாளர்கள் இருந்தனர்.

அதனால் பலர் SITயின் சந்தேகத்திற்கும் சித்ரவதைக்கும் ஆளானர்கள்.

தமிழ் நாட்டில் இருக்கிற புலிகள் ஆதரவாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் பிடித்துச் சித்ரவதை செய்யப்பட்டனர்.

சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தமிழர்கள் வீடுகளில் நள்ளிரவிலும் அதிகாலையிலும் காவலர்கள் புகுந்து ஆண்களை பெண்களைக் கைது செய்தனர்.

வழக்கறிஞர்கள், மனித உரிமை, கட்சி செல்வாக்கு எதுவும் அங்கு செல்லுபடியாகவில்லை. மாட்டியவர்க்கு எல்லாம் அடி, உதை, அவமரியாதை, அவமானம் மற்றும் வேதனை.


முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை என்று எல்லோரும் வாயை மூடிக்கொண்டு நடக்கிற அநீதியை கண்டு கொள்ளாது இருந்து விட்டனர். இன்னும் கூட பலர் அதைப் பற்றி வெளியில் பேசுவதில்லை.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செய்யப்பட்ட எச்செயலையும் ராஜீவ் கொலையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும் குறுகிய பார்வை சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு இருந்ததாக உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

3) தடா சட்டம்:

ராஜீவ் காந்தியின் கொலை ஒரு பயங்கரவாதச் செயல் என்ற புள்ளியில் இருந்தே SITயின் நடவடிக்கைகள் இருந்தன. எனவே தடா என்கிற ஆள் தூக்கி கொடுங்கோல் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

வழக்கமான நடைமுறையில் இருக்கிற இந்தியச் தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒருவரை 15 நாட்கள் தான் காவல் விசாரணையில் வைக்க முடியும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்லது தடா 1987ன் கீழ் ஒருவரை இரண்டு மாத காலத்திற்கு காவலில் வைத்து விசாரிக்கலாம்.

SP அளவிற்கு அந்தஸ்து உடைய உயர் காவல் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றாலே போதுமானது. அதுவே சாட்சியமாகப் பயன்படுத்தப்படும். நீதிபதி முன்பு குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பெறவேண்டியதில்லை.

மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். பிறகு அவர் உச்ச நீதிமன்றத்திலும் முறையீடு செய்யலாம். ஆனால் தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தடா நீதிமன்றத்தை விட்டால் உச்சநீதிமன்றம் தான் கதி.

தடா சட்டத்தின் கீழ் நடந்த புலனாய்வும், தடா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையும் ரகசியமாக வைக்கப்பட்டன.

வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் அரசு தரப்பில் கொடுக்கப்படும் தகவல்களையே சார்ந்து இருந்தனர்.

யாரைக் கைது செய்கிறார்கள், எத்தனை நாள் எங்கு வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

மல்லிகை என்கிற மர்ம பங்களாவின் சுவர்களுக்குத்தான் தெரியும் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் சிந்திய ரத்தமும், கொட்டிய கண்ணீரும், பட்ட அவமானங்களும்.

குடும்பம் குடும்பமாக கொடுமைப் படுத்தப்பட்டார்கள். விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டவர்களின் மனநிலையைக் குலைக்க அவர்களின் வீடுகளுக்குள் இரவு நேரங்களில் திடீர் திடீர் என்று புகுந்து குடும்பத்தினரை தொந்தரவு செய்தனர். அலைக்கழித்தனர்.

சிறப்பு புலனாய்வுக்குழுவின் சித்ரவதையினால் சிதைந்த குடும்பங்கள் ஏராளம். மல்லிகைக்குச் சென்றவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மனநிலை பாதிக்கப்பட்டனர். நிரந்தரமாக உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தங்களது வசதிக்கு ஏற்றார்போல செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் தங்களுக்குச் சாதகமான மனப்பான்மையை உருவாக்கினர்.

ஜனநாயகம் எனும் நாம் போராடிப் பெற்றெடுத்த அரிய கொடை ராஜீவ் படுகொலை என்கிற ஊதிப் பெருக்கப்பட்ட மாயையால் அடித்துச்செல்லப்பட்டது.


4) 26 பேருக்கு தூக்கு

இத்தகைய கொடுமையான தடா சட்டத்தைப் பயன்படுத்தித் தான் 1992ம் ஆண்டு மே மாதம் சென்னையை அடுத்த பூந்தமல்லி தடா சிறப்பு நீதி மன்றத்தில் 26 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

1993 மே மாதத்தில் தடா நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. ஆயிரத்திற்கு மேற்பட்ட சாட்சிகள் குறிக்கப்பட்டு 288 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் கைப்பற்றப்பட்ட புகைப்படங்கள், கடிதங்கள், வீடியோ கேசட்டுகள், வயர்லெஸ் தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடித்துச் சித்ரவதை செய்து வாங்கிய வாக்குமூலங்களைப் பயன்படுத்தியும் சிறப்புப் புலனாய்வுக்குழு தனது வாதத்தை நிகழ்த்தியது.

1998 ஜனவரி மாதம் 28ம் நாள் தடா சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நவநீதன் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வரலாறு காணாத இந்தத் தீர்ப்பு எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

ராஜீவ் கொலையில் முதன்மை குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது தமிழ்நாட்டில் இல்லை அல்லது இறந்து விட்டார்கள். ராஜீவ் கொலைக்கு உதவி செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்க்கு தூக்கு தண்டனை என்பது கடும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

5) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

செப்டம்பர் 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் K.T.தாமஸ், D.P.வாத்வா, S.S.M. கெளத்ரி கொண்ட மூன்று நீதிபதிகள் பெஞ்ச் முன்பு ராஜீவ் கொலை வழக்கு மேல் முறையீட்டு விசாரணைக்கு வருகிறது.

11, மே 1999ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தடா நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதிப் படுத்தியது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 நபர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்தது.

6) கவர்னரிடம் கருணை மனு

2000ம் ஆண்டு நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களைப் பரிசீலித்த தமிழக கவர்னர் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

அதன் பிறகு 2000ம் ஆண்டிலேயே சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் இந்திய ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 2011ம் ஆண்டு பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இம்மூவரது கருணை மனுக்களை நிராகரித்தார். தூக்கு தண்டனை மக்கள் போராட்டத்தால் நிலுவையில் நிற்கிறது.

7) ஜெயின் கமிசன் மற்றும் MDMA

ராஜீவ் கொலைக்கு பின்னால் இருக்கிற சதி பற்றி விசாரித்த ஜெயின் கமிசன் சிறப்பு புலனாய்வுக் குழுவின் புலனாய்வில் முக்கிய கூறுகள் நிறைய விடுபட்டிருக்கின்றன என்றும் அரைகுறையாக புலனாய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறது.

சந்திரசாமிக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறும் ஜெயின் கமிசன் சந்திரசாமிக்கும் அந்நாள் பிரதமர் நரசிம்ம ராவிற்கும் சந்தேகத்திற்கிடமான நெருக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது.

மேலும் சந்திரசாமி பற்றிய தகவல்களைத் தருவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு நரசிம்மராவ் தடை போட்டார் என்றும் ஜெயின் கமிசன் கூறுகிறது.

வர்மா கமிசன் மற்றும் ஜெயின் கமிசன் ஆகிய கமிசன்களின் அறிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் அரசு இப்போது MULTI DISCIPILINARY MONITARING AGENCY (MDMA) என்கிற
புதிய விசாரணை அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கும் CBIயின் அதிகாரிகளின் ஒருவரான சூரி என்பவரைத் தலைவராக நியமித்துள்ளது மத்திய அரசு.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட உடன் சந்திரசாமியும் அவரது கூட்டாளிகளும் தாய்லாந்திற்குப் போனது ஏன் என்கிற கேள்வியில் இருந்து MDMA தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

MDMA தற்போது ராஜீவ் கொலைக்கான சதி எப்போது எங்கு தீட்டப்பட்டது, ஆயுதங்கள், வெடிமருந்து எப்படி யாரால் கொண்டு வரப்பட்டது என்று விசாரித்துக்கொண்டிருக்கிறது.

ராஜீவ் கொலைக்கு யார் யார் காரணம், சர்வதேச சதி இருக்கிறதா, என்கிற உண்மைகள் உறுதியாகாத நிலையில் மூவருக்குத் தூக்கு தண்டனை என்பது நீதியற்றது.

MDMAவின் கண்டுபிடிப்பில் வேறோரு குற்றவாளி வேறோரு காரணத்திற்காக ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததாக வெளிவந்தால் தூக்கு தண்டனையில் கொல்லப்பட்டவர்கள் திரும்ப வருவார்களா?

இதற்கிடையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அதற்காக அடியும் உதையும் வாங்கிய, தற்கொலை செய்து கொண்ட, சிறையில் பல ஆண்டுகளைக் கழித்த, தூக்கு தண்டனைக்குக் காத்திருக்கிற பலரின் துயரத்திற்கு என்ன பதில்?

8) உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இந்திய அமைதிப்படையின் அத்துமீறலும்

ராஜீவ் கொலை வழக்கிலான மேல்முறையிட்டு மனுமீது உச்சநீதி மன்றம் தமது தீர்ப்பில் பழிவாங்கும் நோக்கமே ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்கிறது.

கொலையாளிகள் ராஜீவ் காந்தி என்கிற தனிமனிதரைக் கொல்லவே திட்டமிட்டனர்; இந்தியா மீது அவர்கள் போர் தொடுக்கவோ அல்லது இந்திய இறையாண்மையின் மீது தாக்குதல் நடத்தவோ திட்டமிடவில்லை என்கிறது உச்ச நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு அனுப்பிய இந்திய அமைதிப்படை நடத்திய வன்முறை, பாலியல் பலாத்காரம் இவற்றினால் பாதிக்கப்பட்டவர்களே ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர் என்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்திய அமைதிப்படை இலங்கைக்குப் போனதும் தமிழர்களைக் கொன்று குவித்ததும் அவமானப்பட்டு தோற்றுப்போய்த் திரும்பி வந்ததும் நமது பொது புத்தியில் இருந்து மறைந்து போன இந்தக் காலகட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கும் மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டமும் அத்துயரத்தை நினைவூட்டுகின்றன.


9) இலங்கையில் இந்திய அமைதிப்படை

1987ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரில் யாழ்ப்பாணம் நகரத்தைக் தாக்கியது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணம் பகுதி முடக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது.

பாகிஸ்தான், இலங்கை ராணுவத்திற்கு உதவுகிறது என்கிற செய்தியும் உறுதியானது. இந்தியா தலையிட வேண்டும் என்கிற நிர்பந்தம் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்டது.

அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் எழுந்த ஆதரவு, அதன் பொருட்டு நடந்த போராட்டங்கள் ஆகியவற்றின் அழுத்தமும் நிர்பந்தத்தை அதிகரித்தது.

முதலில் இந்தியக் கப்பற்படை இலங்கைக்கு தமது ஆயுதங்களற்ற கப்பல்களை யாழ்ப்பாணத்தில் சிக்கியிருந்த தமிழ் மக்களுக்கு தேவையான உணவு, உடை, மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் அனுப்பியது. ஆனால் இலங்கைக் கப்பற்படை இந்தியக் கப்பல்களை வழியிலேயே மறித்து திருப்பி அனுப்பிவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஜூன் 4, 1987ம் ஆண்டு இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி ஆபரேசன் பூமாலை என்று பெயரில் தமிழர் பகுதியில் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை வானத்திலிருந்து பொட்டலங்களாகப் போட்டது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு உதவுவது மட்டுமல்லாது இலங்கை அரசியலில் நேரடியாக இந்தியா தலையிட்டது.

இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தியாவுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வந்தார். ஜூலை 27, 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்பேச்சு வார்த்தையில் விடுதலைப் புலிகளை இரு நாட்டு அரசுகளும் இணைக்கவில்லை. அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது என்றும் யாழ்ப்பாணப்பகுதியில் இருந்து தனது ராணுவத்தை விலக்கிக் கொள்வது என்றும் தமிழ்ப் போராளிக் குழுக்கள், தமது ஆயுதங்களை ஒப்படைப்பது என்றும் முடிவானது. தேவையின் பொருட்டு இந்திய ராணுவத்தை இலங்கை அரசு அமைதியை நிலை நாட்ட தமது நாட்டுக்கு அழைக்கலாம் என்றும் ஒப்பந்தமானது.

தெற்கு இலங்கையில் போராடி வரும் JVP எனும் இடதுசாரி ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதற்கு தமது ராணுவத்தை அனுப்ப வேண்டிய சிக்கலில் இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்திய அமைதிப் படையை இலங்கையில் தமிழர் வாழும் வடக்குப் பகுதிக்கு அழைத்தார்.

ஜுலை 30, 1987 தொடங்கி ஆயிரக்கணக்கான முப்படை ராணுவ வீரர்களை இந்தியா இலங்கையில் தமிழர் வாழும் பகுதிக்கு அனுப்பியது. 1987க்கும் 1989க்கும் இடையிலான காலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் குவிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்த ஒப்பந்தப்படி பிற ஆயுதக்குழுக்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க முன் வந்தாலும் விடுதலைப் புலிகள் அமைப்பு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் புலிகள் அமைப்பு இந்திய அமைதிப்படையின் வரவை அதன் இருப்பை எதிர்த்தது. வெகு விரைவில் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் மோதல்கள் தொடங்கின.

இந்தியா எதற்காகத் தமது படையை இலங்கைக்கு அனுப்பியது என்பது பற்றி ராணுவ அதிகாரிகள் மத்தியில் இருந்த தெளிவின்மை, உளவுத்துறையான RAWவுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே வர மறுத்த ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளின் போர் தந்திரங்கள், உள்ளூர் மக்களுக்கு இருந்த விடுதலைப் புலிகள் ஆதரவு, இந்திய அமைதிப்படைக்கு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி பற்றிய புவியியல் அறியாமை ஆகிய காரணங்களினால் இந்திய அமைதிப்படையினர் விடுதலைப்புலிகள் உடனான மோதல்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தனர்.



இந்திய அமைதிப்படையினர் புலிகளுடனான மோதல்களில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் உடனடியாக தமிழர் வாழும் பகுதியில் தேடுதல் வேட்டையை இந்திய அமைதிப்படை தொடங்கியது.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்ததும் ஊடகங்கள் விரட்டி அடிக்கப்பட்டதும் இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு ஏதுவாய் அமைந்தன. வீடுகளில் புகுந்து ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கினர். விசாரணை என்ற பெயரில் பிடித்துக் கொண்டு போனார்கள்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயினர். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மேலும் இந்திய அமைதிப்படையினர் தமிழர்களின் லட்சக்கணக்கான ரூபாய் பெருமான பொருட்களையும் சொத்துக்களையும் கொள்ளையடித்தனர்.

1987, அக்டோபர் 21ம் நாள், இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் புகுந்து மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உட்பட 70க்கும் மேற்பட்டவர்களைக் கண்மூடித் தனமாகச் சுட்டுக்கொன்றனர்.

1989, ஆகஸ்ட் 2ம் நாள், வல்வெட்டித்துறையில் 63 அப்பாவித் தமிழர்களை இந்திய அமைதிப்படையினர் வீடுகளில், தெருக்களில், கடைகளில் சுட்டுக்கொன்றனர்.

வல்வெட்டித்துறை படுகொலை என்பது அமெரிக்கா, வியட்நாம் நாட்டில் மை லாய் கிராமத்தில் நடத்திய படுகொலைக்கு ஒப்பானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வல்வெட்டித்துறையைப் போன்று ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 21ம் தேதிகளிலும் இந்திய அமைதிப்படை அப்பாவித் தமிழர்கள் மீது தமிழர் பகுதியில் தாக்குதல நடத்தி படுகொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் கொள்ளை நடத்தியிருக்கிறது.

இந்தக்குற்றங்களுக்கு யாரும் தண்டிக்கப்படவில்லை. 1989 மற்றும் 1990களில் இந்திய அமைதிப்படை வேகவேகமாக திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டதே ஒழிய விசாரணைகளோ, போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடைபெறவில்லை.

இலங்கையில் இந்திய அமைதிப்படை நடத்திய அத்துமீறல்களுக்கு இந்திய அரசும், சிவில் சமூகமும் நடவடிக்கை எடுத்திருந்தால் உச்ச நீதிமன்றம் சொல்வதைப் போன்ற பழிவாங்கல் நிகழ்ச்சி நடந்திருக்காது. ராஜீவ் காந்தியின் கொலை தடுக்கப்பட்டிருக்கலாம். இலங்கையில் 2009ல் நடந்த இனப்படுகொலையைத் தடுத்திருக்கலாம்.

10) இறுதியாக…

ராஜீவ் கொலையை யார் செய்தார்கள், யார் திட்டமிட்டார்கள் என்பதை இந்திய அரசு அமைத்த MDMA என்கிற MULTI DISCIPILANRY MONITARING AGENCY இன்னும் விசாரணை செய்து கொண்டிருக்கும் வேளையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை என்பது நியாமல்ல.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் ராஜீவ் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. கொலை நடந்த இடத்தில் அவர்கள் இல்லை. கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் யாரோ. கொலை செய்தவர்கள் யாரோ. கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை என்பது நியாயமல்ல.

ராஜீவ் கொலை வழக்கு தடா நீதிமன்றத்தில் தடா சட்டத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட நிலையில் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த வழக்கே ஏற்புடையதல்ல. மனித உரிமைகளை மறுத்து நடத்தப்பட்ட புலனாய்வு, விசாரணை அதன் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பு, இவற்றின் அடிப்படையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்குவது நியாயமல்ல.

ஏற்கனவே 21 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வதே நியாயமானது.

இறுதியாக அரசே ஒரு கொலை செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

நாளைக்கு இதே போன்ற ஒரு புலனாய்வுக்குழுவைக் கொண்டு,
இதே போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு
இதே போன்ற விசாரணை நடத்தி தூக்குக் கயிற்றை அரசு நம்மில் பலர் மீது வீசக்கூடும்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் - நேர்காணல் : பி.பீட்டர் துரைராஜ்

"பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது" ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் - நேர்காணல் : பி.பீட்டர...